எப்படியிருப்பாய் நீ?
காலங்கள் பல கடந்து விட்டாலும்
என் நினைவுப் பெட்டகத்தில்
ஒரு பொக்கிஷமாய்
சேமித்து வைத்திருக்கிறேன் -
உன்னை!
என் சிறு வயது தோழிகளில்
நீ மட்டும் ஏனோ -
தொலைவானில் ஊறும் நிலவென
என்னில் தனித்து நின்று விட்டாய்..!
என் மனதில் அவ்வப்போது எழும்
உனைப் பற்றிய கேள்விகளுக்கு
விடையில்லாமல் -
என் கவிதைகளையே
பதில்களாக்கிக் கொள்கிறேன்!
ஆனாலும் -
எண்ணத் தூரிகையால்
உன் முகம் வரைந்து
என் கற்பனை சுவர்களெங்கும்
ஒட்டி வைக்கிறேன்!
புன்னகை மட்டுமே
அணிந்திருக்கும்
உன் பனியிதழ்களில் -
இப்போது லிப்ஸ்டிக்கின்
பூச்சிருக்குமா?
இளமையும் காலமும் இணைந்து -
மெல்லிய உன் தேகத்தில்
புதுக் கவிதைகள் எழுதியிருக்குமா?
பால் வடிந்த உன்
முக நிலவில் - பருக்களின்
அடையாளங்களிருக்குமா?
கள்ளமில்லாமல் பார்க்கும்
உன் பளிங்கு விழிகள்தான்
சாகசக் கலைகளில்
தேர்ந்திருக்குமா?
காதல் களவாடல்களில்
பறிபோயிருக்குமோ -
ஒருவேளை
உன் இதயமும் ?
இல்லை -
களங்கமில்லா நிலவென
இன்னமும் 'நீ' - நீயாகவே
இருக்கிறாயா?
வழக்கம் போலவே -
இக்கேள்விகளுக்கும்
என்னிடம் விடையில்லை,
ஏனெனில் -
என்னருகில் நீயில்லை!
பிரிவின் வலிகளும்
வேதனைகளும் உள்ளிருந்து
எனை எரித்தாலும்
காலத்தை வென்று நிற்கும்
உன்னுடனான என்
நட்பை எண்ணி சற்றே
கர்வம் கொள்கின்றேன்..!
பிரிந்த நம் தடங்கள்
எப்போதாவது
ஒன்றிணையும்போது -
உன் வாய் மலர்ந்து ஏதும்
விளம்பாவிட்டாலும்
நம் சிநேகிதத்தின் அடையாளமாய்
ஒரு பார்வையோ...
சிறு புன்னகையோ...
மறவாமல் என் மீது
வீசியெறிந்து விட்டுப் போ -
வாழ்ந்து விட்டுப் போகட்டும் -
நான் கொண்ட கர்வமும்,
உன்னதமான நம் நட்பும்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
