உன் வெள்ளிக்கொலுசொலி
வீதியில் கேட்டால்
அத்தனை ஜன்னலும் திறக்கும்...
உன் பார்வை
கொஞ்சம் விலகிவிட்டால்
ஆயிரம் கண்கள் துளைக்கும் ....
உன் எச்சில் சோற்றை
காகம் தின்றால்
சாபம் பட்டே இறக்கும் ...
நீ
செதுக்கிப் போட்ட
பென்சில் துகள்கள்
கவிதையை விட
இனிக்கும் ...
உன் வீட்டுப் பூனை
இங்கு வந்தால்
என் தட்டு சோறு கிடைக்கும் ....
ஒட்டுப்பொட்டை
தவற விட்டால்,
என் புத்தகம் தேடு,
கிடைக்கும் ...
நீ
மருதாணியை
பூசிக்கொண்டால்
மருதாணிச் செடி
சிவக்கும்...
நீ
மொட்டை மாடிக்கு
வந்து நின்றால்
எங்கும் தலைகள்
முளைக்கும்...
நீ
அழகிப் போட்டியில்
கலந்து கொண்டால்
அழகே தோற்றுப் போகும் ...
நீ
முடி விலக்கும்
நளினம் கண்டு
மேகம் விலகிப் போகும்...
நீ
சூடிய பூவை
மீண்டும் விற்கும்
பூக்கடைகளில்
கூட்டம்...
உன் வீட்டுக்கதவு
திறந்திருந்தால்
வைகுண்ட ஏகாதசி...
உன் முகத்தைக்
கூந்தல் மறைத்தால்
பகலில் நடுநிசி...!!!
